Tuesday, April 13, 2010

உலக சித்தர் திருநாள்


நற்பவி
தேவை: ‘சித்தர் அறிவியல் தமிழ் மையம்’
முனைவர் மூலிகைமணி க. வேங்கடேசன்.
23, துரைசாமி சாலை, தி. நகர். சென்னை: 17. தொலைபேசி: 24331494 கைப்பேசி: 9003031796
www.mooligaimani.com
___________________________________________________________________
உலக சித்தர் திருநாள் (14.4.2010)
தமிழ் மொழி, கலை, பண்பாடு பற்றி எல்லோரும் அறிவர். ஆனால் தமிழ் மொழி அளித்த முழுமையான அறிவியலான சித்தர் நெறியைப் பற்றி வெகு சிலரே அறிவர். வாதம், வைத்தியம், யோகம், ஞானம் என நால்வகை அறிவியல் பகுப்புகள் கொண்டவை சித்தர் நெறி. குமரிக் கண்டத்தில் வாழ்ந்தவர்களாகக் கருதப்படும் 'அறிவர் குழுமம்' (Intellectual forum) பிற்காலத்தில் (கி.பி 5 -ஆம் நூற்றாண்டில்) சித்தர் மரபாக மருவியது. தொல்காப்பியர்தான் முதன் முதலாக 'அறிவர்' பற்றிக் குறிப்பிடுகின்றார்,
பார்ப்பார் 'அறிவர்' என்றிவர் கிளவி
- என்று தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது.
மறுவில் செய்தி மூவகைக் காலமும்
நெறியின் ஆற்றிய அறிவன் தேயம்
- என்பது அவர் அறிவர் பற்றிக் கூறும் விளக்கம்.
கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் என அமையும் மூன்று காலங்களையும் குற்றமற உணர்த்தவல்லவர்களே 'அறிவர்' என்பது இதன் விளக்கம்.
இன்று நாம் குறிப்பிடும் சித்தர் எனும் ஞானியரே தொல்காப்பியர் காலத்தில் 'அறிவர்' என்றழைக்கப்பட்டனர்.
'அறிவர் என்போர் இறப்பு, நிகழ்வு, எதிர்வு எனும் மூன்று காலங்களையும் அறிந்த பெரியோர், யோகிகளாய் உபாயங்களால் மூன்று காலமுணர்ந்த மாமூலர் முதலியோர் இவ் அறிவரில் ஒருசாரார்' என்று நச்சினார்க்கினியர் குறிப்பிடுகின்றார்.
இத்தகைய 'அறிவர் மரபு' 5-ஆம் நூற்றாண்டில் விரிவடைந்து இன்று 'பதினெண் சித்தர்' என்று போற்றுமளவுக்கு தமிழில் வாதம், வைத்தியம், யோகம், ஞானம் ஆகிய அறிவியல் செய்திகளை நூற்றுக்கணக்கான பாடல்களில் பதித்துவைத்துள்ளனர். கால வெள்ளத்தால் அடித்துக் சென்று அழிந்தவை போகவும், கரையான்களால் அரித்துத் தின்றவை போகவும், வெந்நீர் காய்ச்ச அடுப்பெரிக்கப் பயன்படுத்தியவை போகவும், எஞ்சியுள்ள சுவடிகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தவற்றை கடந்த 100 ஆண்டுகளில் திரட்டி சிலவற்றை அச்சில் பதிப்பித்தனர், பலவற்றை நூலகங்கள் மற்றும் பரம்பரை சித்த மருத்துவர்களிடம் முடங்கியுள்ளன. இவை ஏறக்குறைய 400 ஆண்டுகளில் ஏட்டில் எழுதப்பட்ட செவிவழிக் செய்திகளே ஆகும். சித்தர்கள் யாரும் தம் கையால் எழுதி பதிப்பிக்கப்பட்டவை அல்ல. இயல், இசை, நாடகத் தமிழ் போல் சித்தர் தமிழ் மிகுந்த அருமை-பெருமை உடையதாகும். பகுத்தறிவுடன் பெருமளவு பொருந்துபவை சித்தர்களின் தத்துவஞானம். சித்தர்கள் உடம்பை 'மெய்' என்றனர். வேதாந்திகள் உடம்பை 'மாயை' என்றனர், அதே போல் சித்தர்கள் மனித வாழ்வை காயகல்ப மூலிகைகள் மூலம் நிலைப்படுத்தி யோக நெறிகள் மூலம் மேம்படுத்தி 'ஏழாவது' அறிவான 'அறிவுக்கண்' திறக்க முயலவேண்டும் என்றனர். சித்தர்களுக்கு ‘அறிவுக்கண்’ எனும் மூன்றாவது கண் இருந்தது. இதுவே எதிர்காலத்தினை உணர்த்த வல்லது. 'தொலைவில் உணர்தல்’ என்பார் மறைமலை அடிகள்.
சித்தர் நெறி நான்கு வகையாகும்
1) வாதம் (Alchemy)
2) வைத்தியம் (Medicine)
3) யோகம் (Yoga)
4) ஞானம் (Wisdom)
2500 ஆண்டுகால வரலாறு கொண்ட 'சித்தர் நெறி' இன்றுவரை உலகால் அறியப்படாத மறைபொருளாகவே உள்ளது. காரணம் 'சித்தர் தமிழ்' எனும் மறைமொழியில் சித்தர் நெறி வடிவமைக்கப்பட்டது தான். இது தவறல்ல, இன்றைய வேதியலில் மறைபொருள் (Che இருப்பதைக் காணலாம். அதாவது, 2 ஹைட்ரஜன் அணுக்கள் ஒரு ஆக்சிஜன் அணுவுடன் இணையும் போது தண்ணீர் உருவாகின்றது என்பதை இவ்வாறாக வேதியல் மொழியில் குறிக்கின்றனர்,
2 H 2 + O 2 = 2 H 2 O (Water)
இதைப்போலவே, சித்தர் தமிழ் மறைபொருளாக சித்தர் அறிவியலைக் குறிப்பிடுகிறது.
'சிவாயநம என செம்பு பொன்னாகும்'
எனும் alchemic formula சிவபெருமானை குறிப்பதல்ல. அது ஒரு சித்தர் அறிவியல் மறைபொருளாகும்.
அதேபோல், சித்தர்களின் பிற அறிவியல் பிரிவுகளான 'மருத்துவ மறைபொருள்' யோக சூத்திரங்கள், தத்துவ ஞானம் ஆகியன அனைத்தும் வேதியியலுக்கு இணையான மறைபொருளால் தமிழில் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றை அறிவதும்- ஆராய்வதும் ஒரு அறிவியல் அகழ்வாராய்ச்சிக்கு இணையாகும். முத்தமிழை தொகுத்த நம் முன்னோர்கள், ஏனோ சித்தர் தமிழை தொகுக்கவில்லை, அதனால் ஆராயப்படவுமில்லை. ஆனால் அந்த மறைமொழி இன்றும் அழியாமல் பரம்பரைச் செல்வமாக சிலரிடம் வாழ்ந்து வருகிறது. அதன் விளைவாகத் தான் இன்று 'சித்த மருத்துவம்', 'யோகப் பயிற்சி' போன்றவை மறுமலர்ச்சி பெற்று வருவதன் பின்னணியாகும்.
1972- இல் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் எடுத்த தீவிர முயற்சியால் சித்தர் அறிவியலின் இரண்டாவது, முன்றாவது பிரிவுகளான சித்த மருத்துவமும், யோகக்கல்வியும் புத்துயிர் பெற்று வருகின்றன.
கடந்த இரண்டு ஆண்டுகளாக 'உலக சித்தர் திருநாள்' சித்த மருத்துவர்களால் சித்திரைத் திங்கள் முதல் நாளன்று கொண்டாடப்படுகின்றது. இது சித்தர் அறிவியலுக்கு எழுச்சியூட்டுகின்றது. இந்த நாளினை சித்த மருத்துவர்கள் மட்டுமே கொண்டாடுவது என்றல்ல, தமிழர்கள் அனைவருமே கொண்டாடவேண்டிய திருநாள். எனவே, கீழ்க்கண்ட சில வேண்டுகோள்களை தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு வருவதை என் தலையாய கடமையாகக் கருதுகின்றேன்,
1) சித்தர் அறிவியல் நெறி என்ற பெயரில் சித்தர்கள் அளித்த வாதம், வைத்தியம், யோகம், ஞானம் எனும் அறிவியல் கருத்துக்களைத் தொகுக்க வேண்டும்.
சித்தர்கள் என்போர் சாமியார்களோ அல்லது ஆன்மீகவாதிகளோ அல்லர், அவர்களின் கண்டுபிடிப்புகளிலும், அனுபவங்களிலும் எள்ளவுகூட கற்பனையோ அல்லது பொய்யுரைகளோ இல்லை, அனைத்தும் அறிவியல் அடிப்படை கொண்டவையே, அதனால் தான் இன்றைய அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட சித்த மருந்துகளும், யோகக் கல்வியும் மேனாட்டு ஆய்வாளர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, சித்தர்களின் அறிவியல் கருத்துக்களை 'சித்தர் அறிவியல்' (Siddhar's science) எனும் பெயரில் தொகுத்து அரசுடைமையாக்க வேண்டும். இதற்காக முதல் செம்மொழி மாநாட்டில் ‘சித்தர் அறிவியல் தமிழ்’ எனும் பெயரில் விரிவான ஆய்வரங்கம் அமைத்து அறிஞர்களால் ஓர் திட்டவரைவு தயாரிக்கப்பட்டுத் தமிழ்நாடு அரசுக்குப் பரிவுரை செய்யவேண்டும், அதனைத் தமிழ்நாடு அரசு
'தமிழக சித்தர் அறிவியல் தமிழ் ஆய்வு மையம்' என்ற பெயரில் கோவையில் மருதமலை அருகில் 25 ஏக்கர் பரப்பளவில் சித்த மருத்துவ வல்லுனர்கள் வழிகாட்டுதலில் இதனை அமைக்க வேண்டும்.
2) அடுத்த ஆண்டு 14.4.2011-இல் தமிழ்நாடு அரசே 'உலக சித்தர் திருநாளைக்' கொண்டாட வேண்டும்.
3) 'சித்தர் தமிழ்' எனும் பெயரில் சித்தர்களின் வாழ்வியல், அறிவியல் கருத்துக்களை விரைந்து தொகுத்து எளிய தமிழில் விளக்கும் வண்ணம் செம்மொழி மாநாட்டில் தனி ஆய்வரங்கம் அமைத்து அவற்றை வெளியிட வேண்டும். இதனைத் தொடர் பணியாக நடத்திட செம்மொழி ஆய்வு மையத்தில் தனித் துறை ஒன்றை உருவாக்க வேண்டும்.
4) சித்தர்கள் அளித்த காயகல்ப மருத்துவம் என்பது உலக மருத்துவ ஆய்வுக்குத் தமிழன் அளித்த மருத்துவக் கொடையாகும். உலகால் அறியப்படாத ரகசியமாக சிதறிக்கிடக்கும் இந்தக் காயகல்ப மருத்துவ முறையை இன்றைய நவீன மருத்துவ ஆய்வுடன் கீபிளி தரத்திற்க்கு ஒப்பாய்வு நிகழ்த்தினால், அடுத்துவரும் தலைமுறையினர் வாழ்வில் ‘நீடிய நலவாழ்வு’ பெறுவார்கள்.
5) பதினெண் சித்தர்களை அறிவியல் அறிஞர்களாக செம்மொழி மாநாட்டில் அறிவித்து, அவர்களின் திருவுருவச் சிலைகளை 'சித்தர் அறிவியல் கோட்டம்' என்ற பெயரில் நிறுவிட தமிழ்நாடு அரசு செம்மொழி மாநாட்டில் அறிவித்து அடுத்த ஆண்டில் இதனை கலைஞர் தலைமையில் பேராசிரியர் அவர்கள் திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணிக்க வேண்டும்.
உலக சித்தர் திருநாளைக் கொண்டாடும் நல்வேளையில் தமிழக அரசு செம்மொழி மாநாட்டின் வெளிப்பாடாக 'சித்தர் அறிவியல் தமிழை; உலகிற்கு அறிமுகப்படுத்தும் வண்ணம் மேற்கண்ட 5 கோரிக்கைகளை ஆய்வு செய்து நடைமுறைபடுத்துவதால் சித்த மருத்துவம் புத்துயிர் பெறும், மேலும் நமது அரசிற்கு வருமானம் வரும் வகையில் Medical tourism திட்டம் மூலம் கோடிக்கணக்கான பொருளையும் பெறலாம். கேரள அரசு இதற்கு ஒரு முன் உதாரணமாக உள்ளது. சராசரியாக 200 முதல் 300 கோடி வரை இந்த Medical tourism மூலம் கேரள அரசு வருமானம் பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்க சித்தர் நெறி! வளர்க சித்த மருத்துவம்!!

1 comment:

  1. very nice it ,every one should know our mooligai ragasiam and sithar life history

    ReplyDelete