Tuesday, April 13, 2010

தமிழில் பேசினால் ஆயுள் அதிகரிக்கும்

தமிழில் பேசினால் ஆயுள் அதிகரிக்கும்
முன்னுரை:
கற்றுக் கொடுக்கும் இனம் தமிழினம்,
அதற்குக் கற்றுக்கொடுக்க நினைப்பது அறிவீனம்'

வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் வரும் இந்த வசனம் தமிழின் செம்மையை ஒரே வரியில் உணர்த்துவதாகும். மானிடம் எப்படி வாழவேண்டும் என்றும், எப்படி வாழக்கூடாது என்றும் பாமரன் முதல் பகுத்தறிவாளி வரை பின்பற்றும் வாழ்க்கை நெறிமுறைகளை வாழ்ந்துக் காட்டியவர்கள் தமிழர்கள். தொல்காப்பியம், சங்கப் பாடல்கள், திருக்குறள் தொடங்கி சித்தர் இலக்கியம், நாட்டுப்புற இலக்கியம் என விரியும் தமிழ் இலக்கிய மரபு செம்மாந்த ஒரு வாழ்க்கை நெறிமுறையை நமக்கு 'பூமிக்கு வெளியே ஒரு புதையலாக' அளித்துள்ளது. இயல், இசை, நாடகம், மருத்துவம், அரசியல், போர், வணிகம், விவசாயம் என்று எதையும் விட்டுவைக்காமல் 'இப்படித்தான் வாழவேண்டும்' என்று ஒரு கோட்பாட்டினை வகுத்து, அதன்படி இன்று வரை உலகில் வாழ்பவர்கள் தமிழர்கள் மட்டுமே.
இன்றைய அறிவியல் கூட அறிந்திராத பல உடலியிங்கியல் காயகல்ப விதிமுறைகளை உணர்ந்து ஏடுகளில் பதிவு செய்துள்ளனர். கி.பு. 5-ம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படும் திருமூலர் என்ற சித்தர் நம்முடைய மூச்சுப் பயிற்சி மற்றும் உணவையும் நெறிப்படுத்திகொண்டால் மனிதனின் வாழ்வு 120 ஆண்டுகள் என்று உறுதியாகக் கூறுகின்றார். நோய் அணுகா விதிகள், சாகாக் கலை, யோகம் போன்ற நுட்பமான செயல்களில் பிராணசக்தியின் பங்கு அதிகமானது.
'பிராணாயாமம்' 2 என்று பின்னர் சமஸ்கிருதத்தில் மாற்றியமைக்கப்பட்டு, இன்று உலகம் முழுவதும் பின்பற்றப்படும் இந்த மூச்சுப் பயிற்சியின் அடிப்படையே தமிழ் மொழி தான்.
தமிழ் மொழியின் ஒலி, எழுத்து, சொல், பொருள் யாவும் நம் உடலின் இயக்கத்துடன் ஒன்றி செயல்படுகின்றது. தமிழில் பேசினால் உடலின் இயக்கமும் மூச்சு நடையும் நெருக்கமாக இயைந்து இரண்டும் சீராகி அதன் பயனாக வாழ்நாள் அதிகரிக்கின்றது 1 என்பது அனுபவ உண்மை. இதை உறுதிப்படுத்தவே இந்த ஆய்வு. தமிழில் அதிகம் பேசும் பட்டிமன்ற பேச்சாளர்கள், தமிழாசிரியர்கள், திருமுறை அர்ச்சகர்கள், மற்றும் நம் வீட்டிலேயே உள்ள 80 வயதைக் கடந்த தாத்தா-பாட்டி ஆகியோரின் ஆரோக்கியத்திற்கான காரணம் இவர்கள் அனைவரின் பேச்சு முழுக்க முழுக்க தமிழிலேயே அமைந்தது தான் மூலகாரணமாகும். சுருக்கமாகச் சொன்னால் பழந்தமிழரின் வாழ்நாள் ரகசியம் என்பது அவர்களின் ‘தமிழ்ப் பேச்சே’
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை, உ.வே. சாமிநாதய்யர், தேவநேய பாவாணர், கி.வா. ஜகந்நாதன், கிருபானந்தவாரியார் சுவாமிகள், மகாவித்துவான் வேணுகோபால பிள்ளை,
முத்தமிழ்க் காவலர் கி.அ.பெ. விஸ்வநாதம், சிலம்புச் செல்வர் ம.பொ.சி,
பேராசிரியர் அ.மு. பரமசிவானந்தம், பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தம் போன்ற முதுபெரும் அறிஞர்கள் 80 வயதைக் கடந்தும் ஆரோக்கியமாக வாழ்ந்தவர்கள்.
தமிழ் எழுத்துக்களின் பிறப்பியலை விரிவாகத் தொல்காப்பியத்தில் நமக்கு விவரிக்கின்றார் தொல்காப்பியர். சித்தர்கள், மூச்சுப் பயிற்சியில் குறிப்பிடும் ஆறு ஆதாரங்களினால் வரும் அதிர்வுகளே ஒலி - எழுத்துக்கள் வரக் காரணமாக உள்ளதாகக் கூறுகின்றனர்.
உந்தி முதலா முந்துவளி தோன்றித்
தலையினும் மிடற்றினும் நெஞ்சிலும் நிலைஇப்
பல்லும் இதழும் நாவும் மூக்கும்
அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்
உறுப்புற்று அமைய நெறிப்பட நாடி
எல்லா எழுத்தும் சொல்லுங் காலைப்
பிறப்பின் ஆக்கம் வேறு இயல
திறம்படத் தெரியும் காட்சியான

(தொல். எழுத்து. பிறப்பு. 1)

எழுத்துக்கள் பொதுவாக எவ்வாறு பிறக்கின்றன என விளக்குவது பிறப்பியல் இலக்கணம். தொல்காப்பியர் பிறப்பியலின் முதல் நூற்பாவில் எழுத்துகளின் பொதுப் பிறப்பு முறையை விளக்குகிறார்.
1. கொப்பூழ் அடியாகத் தோன்றி மேலே எழுகின்ற உதானன் எனும் காற்று தலையிலும், கழுத்திலும், நெஞ்சிலும் தங்குகிறது.
2. பின்னர்த் தலை, கழுத்து, நெஞ்சு எனும் அம்மூன்றுடன் பல், இதழ், நாக்கு, மூக்கு, அண்ணம் உட்பட எட்டு இடங்களிலும் ஓர் உறுப்போடு ஓர் உறுப்பு பொருந்தி அமைய ஒலிகள் உருவாகின்றன.
3. இவ்வாறு காற்று எழுந்து வெவ்வேறு உறுப்புகளின் வெவ்வேறு முயற்சிகளால் எழுத்துகள் பிறப்பதால் அவ்வெழுத்துகள் வெவ்வேறாகத் தோன்றுகின்றன.
இதன் பொருளை ஆராயுமுன், சித்தர்கள் கூறும் மூச்சுப் பயிற்சியில் ஆறு ஆதாரங்கள் பற்றிக் காண்போம்;

  • 1. மூலாதாரம்
  • 2. சுவாதிட்டானம்
  • 3. மணிபூரகம்
  • 4. அநாகதம்
  • 5. விசுத்தி
  • 6. ஆக்ஞை
இந்த ஆறு ஆதாரங்களில் மூச்சு பொருந்தும் போது அந்தந்த ஆதாரங்களைச் சுற்றியுள்ள இதழ்களில் 4,6,10,12,16,2 என அதிர்வின் விளைவாக ஒலி தோன்றும். இவ்வொலியைக் குறிக்கும் வகையில் வரி வடிவங்களைக் குறித்து வருகின்றனர். 50 இதழ்களுக்கு 50 எழுத்துக்கள் விளங்குகின்றன. பிரணவம் எனப்படும் ‘ஓம்’ எனும் ஒலியே அனைத்து ஒலிகளுக்கும் காரணமாகின்றது. ஆக, 50+1 = 51 எழுத்துக்கள். சித்தர்களின் பாடல்களில் 51 அட்சரம் எனக் குறிப்பிடப்படுபவை இவையேயாகும். ஆறு ஆதாரங்களில் ஏற்படும் அதிர்வுகளே 51 ஒலிகள். அவற்றின் வடிவங்களே 51 அட்சரங்கள். அவ்வொலிகளின் அட்சரங்களைக் கீழ்வருமாறு காணலாம். (திருமூலர் காலத்தில் தமிழ் அட்சரங்கள் எண்ணிக்கை 51)

  • ‘அ’ முதல் ‘ஔ’ வரை - 12
  • ‘க’ வரிசை - 4
  • ‘ங’ வரிசை - 1
  • ‘ச’ வரிசை - 4
  • ‘ஞ’ வரிசை - 1
  • ‘ட’ வரிசை - 4
  • ‘ண’ வரிசை - 1
  • ‘த’ வரிசை - 4
  • ‘ந’ வரிசை - 1
  • ‘ப’ வரிசை - 4
  • ‘ம’ முதல் ‘ன’ வரை வகைக்கு ஒன்று - 9
  • ஹ, ஜ, ஷ, ஸ, க்ஷ ஆகிய வகைக்கு ஒன்று - 5
  • ஓம் - 1
  • மொத்தம் - 51
இக்கருத்துப்படி பிராணாயமத்தில், ஆறு ஆதாரங்களின் இதழ்களில் ஏற்படும் அதிர்வுகளால் தோன்றும் ஒலிகளே 51 வரி வடிவங்களாக உருவாயின என்பது புலனாகிறது. இதனைத் தொல்காப்பியத்தில் வரும் எழுத்து பிறப்பியலுடன் ஒப்புநோக்கினால், கொப்பூழுடியாகத் தோன்றி முந்துகின்ற காற்று தலை, மிடறு, நெஞ்சு ஆகிய இடங்களில் பொருந்திப் பல்லும், இதழும், நாவும், மூக்கும், அண்ணமும் என்ற ஐந்துடனே நின்ற தலையும் மிடறும், நெஞ்சுங்கூடிய எட்டாகிய முறைமையுடைய தன்மையோடு கூடிய உறுப்புகளோடு ஒன்றுற்று அமைதலால், எழுத்துக்களின் பிறப்பு வேறுபாடுகளெல்லாம் தெரியும் என்னும் கருத்தில்,
தலை, மிடறு, நெஞ்சு எனும் மூன்று இடங்களில் காற்று பொருந்தும் தன்மையைத் தொல்காப்பியர் சுட்டிக்காட்டுகின்றார். சித்தர்கள் காட்டிய ஆறு ஆதாரங்களில் தொல்காப்பியம் கூறும் இந்த மூன்று இடங்களும் உள்ளன.
சித்தர்கள் கருத்தினைத் தொல்காப்பியர் நூற்பாவுடன் பொருத்தும்போது,
இடம் அதிர்வு இதழ்கள் ஒலி எழுத்து
தலை 2 2 2
மிடறு 16 16 16
நெஞ்சு 12 12 12
30 30 30
இவற்றின்று, தமிழில் உள்ள உயிரொலிகள், மெய்யொலிகள் ஆகிய முப்பதும், தலை, மிடறு, நெஞ்சு எனும் மூன்று ஆதாரங்களிலிருந்து தான் தோன்றுகின்றன என்பது புலனாகும்.
பிராணாயாம யோகப் பயிற்சியும் இதே அடிப்படையில் அமைகிறது. பிராணாயமம் தரும் பலன்களாக நம் நுரையீரல் வலுவடைந்து - விரிவடைந்து பிராண வாயு சீராக சுழல்கிறது என்றும், இதனால் உள்ளுறுப்புகள் நன்றாகச் செயல்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அதன் பயனாக ஆயுள் அதிகரிக்கின்றது 2 என்று உலக அரங்கில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஒப்புநோக்கினால், தமிழைப் பேசினாலே இந்த 6 ஆதாரங்களினால் வரும் அதிர்வினாலும், தமிழுக்கே உள்ள மெல்லினம், இடையினம், வல்லினத்திற்க்கான மாத்திரை உச்சரிப்பினாலும், பிராணாயமம் செய்வதால் வரும் அதே பலன்களை தமிழில் பேசும்போது நாம் பெறுகின்றோம் என்பது புலப்படும்.
இக்கருத்தைச் சோதனைச் செய்ய தமிழ்க்கடவுளான முருகப் பெருமானை நினைத்து அருணகிரிநாதர் அருளிய ‘கந்தரனுபூதி’யை வாய்விட்டுப் பாடிப்பாருங்கள், அதற்கு முன் பின் உங்கள் இரத்த அழுத்தத்தை குறித்துக்கொள்ளுங்கள். இந்தப் பாட்டின் அமைப்பு மெல்லினத்தில் தொடங்கி, இடையினமாக தொடர்ந்து கடைசியில் வல்லினத்தில் முடியும். 51 பாடல்களையும் பாடி முடிக்கும் தருணம் சுவாசம் சீரடைந்து, ரத்த நாளங்களில் புத்துணர்ச்சி பாய்வதை உணரலாம். அறிவியல் ரீதியாக ரத்த ஓட்டம் சீரடைவதால் பிராணவாயு மற்றும் சப்த தாதுக்கள் எல்லா உள்ளுறுப்புகளுக்கும் பரவி அவைகளை மேலும் நன்னிலையில் செயல்பட வைக்கின்றது. இதனால், திசுக்களின் வாழ்நாள் நீடிக்கின்றது, ஆரோக்கியம் நிலைக்கின்றது.
முடிவுரை:
தமிழில் பேசுவதால் நுரையீரல் வலுவடைந்து, விரிவடைந்து பிராண வாயு சுழற்சி அதிகரித்து, வாழ்நாள் நீடிக்கும்.
நீடிய நலவாழ்வை அளிக்கும் காயகல்ப மருந்தை சிட்த்ஹர்கள் அமிர்தம் என்று குறிப்பர். ‘தமிழ்மொழி’ அதன் உச்சரிப்பிலேயே காயகல்பமாக விளங்குகிறது என்பதை மேற்கண்ட கருதுகோள் உறுதிப்படுத்துகிறது.
பாரதிதாசன் பாடிய ’தமிழுக்கு அமுதென்று பேர்’ என்ற வைர வரியிவ் கவிதைமட்டுமல்ல, அறிவியலும் அனுபவ உண்மையும் உள்ளது. இதனை இன்றைய அறிவியல் வல்லுநர்கள் ஆய்ந்து, ‘தமிழ்’ வெறும் மொழி மட்டுமல்ல; மாந்தர்க்கு வாழ்நாளை நிலைக்கச்செய்யும் காயகல்பமுமாகும் என்பதை நிறுவலாம்.
Dr . பாலாஜி, சென்னை : 91-9094777222

No comments:

Post a Comment